ஜார்கண்ட் மாநிலம், சிம்தேகாவில் மதரஸாவுக்கு படிக்க வந்த எட்டு வயது சிறுமியை இமாம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மதரஸா இமாம், அமீன் எனும் அமினுல்லா என்று தெரியவந்திருக்கிறது.
மேலும் இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தோழியுடன் மதரஸாவுக்கு நேற்று சென்றிருக்கிறார். அப்போதுதான் இமாம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாக மதரஸாவுக்கு சென்றபோது, இமாம் அங்கு காணவில்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் அஞ்சுமன் இஸ்லாமியாவுக்குச் சென்று போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
அங்கு அஞ்சுமன் இஸ்லாமியா உறுப்பினர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, இமாம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்களுடனே காவல் நிலையத்துக்குச் சென்று இமாம் மீது புகாரளித்தனர். அதையடுத்து தலைமறைவான இமாமைக் கண்டுபிடிக்க குழு அமைத்து தேடிவந்த சிம்தேகா போலீஸார், இன்று அவரை கைதுசெய்தனர்.
பின்னர் இது குறித்துப் பேசிய சிம்தேகா போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.