பொங்கல் பரிசு தொகுப்பு, பொருட்கள்: தமிழக அரசு சொன்ன தகவல்!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கில் கொள்முதல் என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என அரசு தரப்பு பதிலளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேஷ்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது.

இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், அந்த கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதற்கு மாற்றாக அவற்றை தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொள்முதல் என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.