நியூயார்க்,
உலக கோடீசுவரர்கள் வரிசையில் இடம் பெற்ற எலான் மஸ்க், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். இதன்பின்பு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். பல முக்கிய பதவிகளை வகித்தவர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டுவிட்டரிலும் கட்டணம் வசூலிப்பது உள்பட சில அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். பல டுவிட்டர் கணக்குகளை முடக்கவும் செய்துள்ளார். இதனால், பலரது அதிருப்தியையும் சம்பாதித்து உள்ளார்.
இந்த நிலையில், எலான் மஸ்கின் தாயார் மேயே மஸ்க், டுவிட்டர் வழியே ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார். அதில், தனது மகன் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு துப்பாக்கி சூடு மிரட்டல் விடப்பட்டது பற்றிய செய்தியை பகிர்ந்து உள்ளார்.
லார்ரி எல்டர் என்பவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அடால்ப் ஹிட்லர், மாசே துங் மற்றும் எலான் மஸ்க் என 3 பேரும் தெருவில் நடந்து போகின்றனர்.
அப்போது, அமெரிக்காவின் இடதுசாரி நபரிடம் 2 தோட்டாக்கள் நிரப்பிய ஒரு துப்பாக்கியை கொடுக்கின்றனர். அவர், 2 தோட்டாக்களையும் எலான் மஸ்க்கை நோக்கியே சுடுவார் என தெரிவித்து உள்ளார்.
இதனை டேக் செய்து, மஸ்கின் தாயார் மேயே மஸ்க் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், என்ன ஒரு வெறுக்கத்தக்க மற்றும் அச்சுறுத்தும் டுவிட் பதிவு.
உங்களுக்கு குழந்தைகளோ அல்லது குடும்பமோ இருக்காது என நான் நினைக்கிறேன். ஏனெனில், இதனை கேட்டால் அவர்கள் அவமானத்தில் தலையை தொங்க போட்டு கொள்வார்கள் என தெரிவித்து உள்ளார்.
லார்ரி விடுத்த அச்சுறுத்தலுக்கு அவருக்கு பதில் அளித்து விட்டேன் என்றும் மேயே கூறியுள்ளார். அதற்கு எலான் மஸ்க், நன்று என பதிலுக்கு பதிவிட்டு உள்ளார்.
இதன்பின்னர், எலான் மஸ்க் தனக்கே உரிய பாணியில் லார்ரிக்கு பதிலடி கொடுத்து உள்ளார். அதில், 2 முறையும் தோட்டாக்கள் குறிதவறி சென்று விடும் என்று மஸ்க் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காரில் சென்ற தனது மகனை மர்ம நபர் இரவில் பின்தொடர்ந்த செய்தியை மஸ்க் டுவிட்டரில் பகிர்ந்து இருந்த நிலையில், அவருக்கு மிரட்டல் விடுத்து மற்றொரு செய்தி வெளிவந்து உள்ளது.
எலான் மஸ்க்கின் மகனை பின்தொடர்ந்த நபர் ஜேக் ஸ்வீனி என குறிப்பிட்ட மஸ்க், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க போகிறேன் என்றும்கூறியுள்ளார்.