சில நிமிடங்களில் எரிந்து, கருகிய மின்சார ஸ்கூட்டர்; அதிர்ச்சியான உரிமையாளர்

விரார்,

மராட்டியத்தின் கிழக்கு விரார் பகுதியில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை அதன் உரிமையாளர், வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். ஒரு மணிநேரத்திற்கு பின்னர், திடீரென அந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து கொண்டது.

ஒரு சில நிமிடங்களில் அது கருகி போனது. அந்த நேரத்தில் யாரும் அருகே இல்லை. அதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டது பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். எனினும், அதற்குள் அது எரிந்து போனது.

இதனால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து போய் உள்ளார். மராட்டியத்தின் வசாய் பகுதியில் ஒரு சில மாதங்களுக்கு முன் மின்சார ஸ்கூட்டர் ஒன்றின் பேட்டரி, இரவில் அதிகம் சார்ஜிங் செய்ததில் வெடித்து சிதறியுள்ளது.

கடந்த செப்டம்பர் 23-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில், சபீர் அன்சாரி என்ற 7 வயது சிறுவன் உயிரிழந்து உள்ளான். இதேபோன்று, செப்டம்பர் 13-ந்தேதி செகந்திராபாத் நகரில் மின்சார ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

கடந்த மார்ச் மாதத்தில், மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில் நபர் ஒருவர் மற்றும் அவரது மகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மின்சார ஸ்கூட்டரின் பாதுகாப்பு விசயங்கள் பற்றி ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.