"நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போராட்டம் நடக்கிறது" – ராகுல் காந்தி

ஹரியாணா: “நாட்டில் இன்று இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பணி இருக்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்று வந்த காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை புதன்கிழமை ஹரியாணா மாநிலத்திற்குள் நுழைந்தது. அம்மாநிலத்தின் நூக் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “கன்னியாகுமரியில் இருந்து இந்த யாத்திரை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்கள். இந்திய ஒற்றுமை யாத்திரையின் மூலம் நான் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறந்துள்ளேன். நாட்டில் அவர்கள் வெறுப்பை பரப்ப முயலும்போது, நமது சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் அன்பை பரப்ப முயல்கிறார்கள்.

நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே மோதல் நடக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மோதல் புதியததோ அல்லது 21ம் நூற்றைண்டைச் சேர்ந்ததோ இல்லை. இந்த மோதல் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒரு சித்தாந்தம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பலன்களை அளிப்பது. மற்றொன்று எளியவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் குரல்களை உயர்த்துவது. இந்த மோதல் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பணி இருக்கிறது. நம் அனைவருக்கும் ஒரு பணி இருக்கிறது. அதற்காக தான் நான் இந்த யாத்திரையை தொடங்கி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.