கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், “தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்‌, மேற்கு-தென்மேற்கு திசையில்‌ நகர்ந்து 25ஆம்‌ தேதி காலையில்‌ இலங்கை கடற்கரை அருகில்‌ வரக் கூடும்‌. அதன்‌ பிறகு மேலும்‌ மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம்‌ தேதி காலையில்‌ இலங்கை வழியாக குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்‌.

இதன்‌ காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களிலும்‌, உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ அநேக இடங்களிலும்‌, வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.” என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.