கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இன்று சாமல்பட்டி அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக சென்று, அங்கு பன்றிகளை பிடிப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார்.
அந்த மின்வேலிக்கு இணைப்பு கொடுப்பதற்காக அருகே உள்ள மின் கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின் கொக்கி போட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்றிக்கு விரித்த வலையில் தானே மாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.