10 ரூபாய்க்கு டி-ஷர்ட்… டமால் டுமீல் ஆஃபர்… ராசிபுரம் துணிக்கடையில் தள்ளுமுள்ளு!

தமிழக மக்களுக்கு விடுமுறை காலம் தொடங்கிவிட்டது. இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்து தொடர்ச்சியாக அரையாண்டு விடுமுறை வரவுள்ளது. இதையடுத்து புத்தாண்டு பண்டிகை வருகிறது. இதனால் பலரும் ஷாப்பிங் செய்ய விரும்புவர். பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கி மகிழும் வண்ணம் பல கடைகளில் ஆஃபர்கள் வழங்கப்படும்.

ராசிபுரம் மெகா ஆஃபர் அறிவிப்பு

இந்நிலையில் நாமக்கலில் புதிதாக திறக்கப்பட்ட கடை ஒன்றில் யாரும் எதிர்பார்க்காத மெகா ஆஃபர் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 10 ரூபாய்க்கு பிராண்டட் டி-ஷர்ட் விற்பனை. இதை கேட்டாலே நாமக்கல் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்துவிடுவர் என்பதில் சந்தேகமில்லை. இனி விஷயத்திற்கு வருவோம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி கன்னையா தெருவில் இன்று (டிசம்பர் 25) புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது.

அறிமுக சலுகை மட்டுமே

இங்கு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் இந்த சலுகை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விளம்பரம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்த நிலையில், தகவலறிந்து ஏராளமான இளைஞர்கள் அதிகாலை 5 மணி முதலே கடை முன்பு குவிந்தனர்.

10 ரூபாய்க்கு டி-ஷர்ட்

இதன் காரணமாக அப்பகுதி சாலைகளில் கூட்டம் நிரம்பி வழிந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடை திறப்பதற்குள் நெரிசல் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றது. சரியாக காலை 8 மணிக்கு கடை திறக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்கத் தொடங்கினர்.

குவிந்த இளைஞர்கள்

இளைஞர்கள் பலரும் 10 ரூபாய் கொடுத்து கைநிறைய டி-ஷர்ட் வாங்கி கொண்டு சென்றனர். பொதுமக்கள் பலரும் கிளம்பிய பின்னர் கூட்டம் குறைந்தபாடில்லை. அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சாலை முழுவதும் வரிசையாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு கடை முன்பு குவிந்தனர்.

ஓடிவந்த போலீசார்

நேரம் ஆக ஆக நூற்றுக்கணக்கான மக்கள் வந்துவிட்டனர். இந்நிலையில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் பொதுமக்கள் டி-ஷர்ட் வாங்கி செல்லும் வகையில் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மூடப்படும் கடை

இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடையை உடனே மூடுமாறு போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்குள் ஆஃபர் டி-ஷர்ட்களை வாங்கி விட வேண்டும் என்று இளைஞர்கள் முண்டியடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.