தாயின் இறுதி ஆசை… ICU-வில் திருமணம் செய்து கொண்ட மகள்.. அடுத்து நடந்த துயரம்

பிகாரில் உடல்நிலை சரியில்லாமல் மரண படுக்கையில் கிடந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஐசியு-வில் தாயின் முன்பு ஒரு மகள் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிகார் மாநிலம் குராரு தொகுதி பாலி கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமாரின் மனைவி பூனம் குமாரி வர்மா. இவருக்கு உடல்நிலை மோசமாகி கயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பூனம் குமாரியின் உடல்நிலை மேலும் மோசமாகி எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்று மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினர்.

இந்த சூழ்நிலையில், பூனம் கடைசி ஆசையாக தனது 26 வயதான மகள் சாந்தினி, தனக்கு முன்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே சாந்தினிக்கும் சேலம்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமித் கவுரவ் (28) என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க பேசுச்சு வார்த்தை இருந்து வந்தது. மேலும், இருவருக்கும் டிசம்பர் 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறுவதாகவும் இருந்தது. இந்நிலையில், பூனம் தனது கடைசி ஆசையை கூறியதும், சுமித்தின் குடும்ப உறுப்பினர்களிடம் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இரு வீட்டாரும் பரஸ்பர சம்மதத்துடன் பூனத்தின் கடைசி ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சுமித் கவுரவ் மற்றும் சாந்தினியும் ஐசியு-க்குள் தாயின் முன்பு மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போது, இரு தரப்பிலிருந்தும் நான்கு பேர் மட்டுமே வந்திருந்தனர்.

மகளின் திருமணத்தை மரண படுக்கையில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த தாயை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கள் குளமாகின. மாலை மாற்றிக்கொண்ட கையோடு இருவரும் பூனம் குமாரிடம் ஆசி பெற்றனர். பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து பூனம் குமாரியின் உயிர் சத்தமில்லாமல் பிரிந்தது.

இந்த நிகழ்வினை குறித்து பேசிய சாந்தினி குமாரி, தனது தாயார் பூனம் ”மகத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்” நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்திற்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து சரியில்லாமல் இருந்தது. மேலும், இதயநோயாலும் அவர் பாதிக்கப்பட்டார். தாயின் ஆசையை நிறைவேற்றவே மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்டதாக சாந்தினி குமாரி தெரிவித்தார்.

மரண படுக்கையில் இருந்தபோதும் மகளின் திருமணத்தை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்ற தாயின் ஆசைக்கு இணங்க மகளும் எளிமையான முறையில் அதுவும் ஐசியு வார்டில் திருமணத்தை முடித்துக்கொண்ட சம்பவம் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாயை பிரிந்த மகளுக்கு மருத்துவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.