ஜே.பி.நட்டா தமிழ்நாடு மிஷன்… மேற்கு மண்டலத்தில் பாஜக போட்ட பலே ஸ்கெட்ச்!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பாஜகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

கோவையில் பலத்த பாதுகாப்பு

இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் அப்பகுதியில் இயங்கி வந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்தது. ஆனால் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக அவரது வருகையில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜே.பி.நட்டா வருகை

எனவே நாங்கள் இந்த கோயிலுக்கு வந்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். தேசியத் தலைவர் வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று (டிசம்பர் 27) மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார். தேசியத் தலைவர்கள் வந்தால் அதிமுக தலைமையில் இருந்து வந்து வழக்கமாக சந்தித்து பேசுவர்.

அதிமுகவினர் சந்திப்பு இல்லை

ஆனால் இம்முறை யாரும் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதிமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பாஜகவினரின் நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டது என்றார். மேலும் பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

எல்.முருகன் போட்ட பிளான்

அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை நீலகிரியில் இருந்து தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டார். பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்ற கேள்விக்கு, பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்.எல்.ஏவை பெற்றுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

2024 தேர்தல் இலக்கு

அங்குள்ள அடிப்படை குறைகளை கண்டறிந்து தீர்த்து கொண்டிருக்கிறார். இப்பகுதியானது பாஜகவை அதிக மக்கள் சார்ந்துள்ள தேசியம் மிகுந்த பகுதி. ஆகையால் இங்கு மிகப்பெரிய விஜயம் அமையும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தனது செல்வாக்கை உயர்த்த தீவிரம் காட்டி வருகிறது.

இதையொட்டி மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோவை வரவுள்ளார். கூட்டணி வியூகம், பிரச்சார யுக்தி, பூத் கமிட்டி வலுப்படுத்துதல், விரிவான தேர்தல் திட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக பாஜகவினருக்கு அறிவுரைகள் வழங்கவிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.