கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் காலை 10 மணிக்கு 142 அடியை எட்டியது. அணையை ஒட்டிள்ள பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஐந்தாவது முறையாக நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிலங்கள் உள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீருக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
1979 ல் அணை பலவீனம் அடைந்து விட்டது என கேரளா கூறிய புகாரைத் தொடர்ந்து 152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணை 136 அடியாக குறைத்து நிலை நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகப் பகுதியில் இதனை நம்பி இருந்த விளைநிலங்கள் குறைந்தன.
தமிழக அரசு மற்றும் விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 2014 மே 7 ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக நிலை நிறுத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கியது.
ஐந்தாவது முறை: தீர்ப்பு வழங்கிய அதே ஆண்டில் நவ.21 ல் நீர்மட்டம் 142 அடி எட்டியது. அதன்பின் 2015 டிச.7, 2018 ஆக.16, 2021 நவ.30, ஆகிய தேதிகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டி அணையின் உறுதி தன்மையை நிரூபித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement