‘2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே இலக்கு என்று மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக மருத்துவ ஆவண காப்பகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ ஆவண காப்பகத்தை, மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஆவண காப்பகத்தை பார்வையிட்ட அவர், அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தார். பின்னர் காசநோய் தாக்கம், மேம்பட்ட சேவை மற்றும் ஆராய்ச்சி பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பத்மபிரியதர்ஷினி மற்றும் வல்லுனர் குழு அதிகாரிகள் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு பழமையான நிறுவனம் என்றார். பல்வேறு துறைகளில் இதன் செயல்பாடுகள் அளப்பரியது என்று கூறினார். காசநோய் பிரிவில் நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுத்தல் ஆகிய 3 பணிகளை சிறப்பாக செய்து வருகிறது என்றார்.
தற்போது புதிய தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை பெருமளவில் குறைக்க வேண்டும் மற்றும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதி பூண்டிருக்கிறார் என்று கூறினார்.
அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம் என்று மத்திய இணையமைச்சர் தெரிவித்தார். பிரேசில், சீனா, ஜப்பான், கொரியா நாட்டில் கொரானா அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டோம் என்றார்.
ஆக்சிஜன், மருந்து, பி.பி.கிட் மற்றும் எல்லா மருத்துவ உபகரணங்கள் இருப்பையும் சரிபார்த்து வருகிறோம் என்று கூறினார். கொரோனா குறித்து மிகவும் விழிப்பாக இருக்கிறோம் என்று கூறிய அவர், அனைத்து வகையிலும் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
பொதுமக்களும் முகக்கவசம் அணிவதால் மட்டுமே கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறிய அவர், அனைவரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றார்.
newstm.in