ஊழல் வழக்கில், ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகியை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைத்தது.
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கொரோனா தடுப்பு விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல் மற்றும் ஊழல் என ஆங் சான் சூகி மீது 12க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், ஆங் சான் சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.
சீனாவில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா; உலக சுகாதார அமைப்பு கவலை!
ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிமுறைகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் போன்ற வழக்குகள் தொடரப்பட்டன. இதில் கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மியான்மர் நீதிமன்றம், பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. அதே போல் தேர்தல் முறைகேடு வழக்கு, இன்னொரு ஊழல் வழக்கு என தற்போது அவரது சிறை தண்டனை காலம் 26 ஆண்டுகளாக உள்ளது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள 5 குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று அளித்துள்ளது. அவர் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 33 ஆண்டுகள் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.