புதுடெல்லி: மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லையென்றாலும், கரோனா கட்டுப்பாடு தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம். உள்நாட்டு தேவையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பிபிஇ உடைகள், ஊசிகள், கையுறைகள், ரெம்டெசிவிர் மற்றும் பாரசிட்டமால் போன்ற மருந்துகளின் விவரங்களை தினசரி சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். கடந்த 2020-ம் ஆண்டில்
கரோனா தொற்றை எதிர்கொள்ள பிபிஇ உடைகள், கிருமிநாசினிகள், கையுறைகள், பரிசோதனை உபகரணங்கள், ஊசிகள், ரெம்டெசிவிர் மற்றும் பாரசிட்டமால் மாத்திரைகள் போன்றவற்றின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சீனாவில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால், ஜனவரியில் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்கலாம். எனவே அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது. இந்தியாவில் மற்றொரு கரோனா அலை ஏற்பட்டால், அதை சந்திக்க மாநிலங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பல ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.