வடகிழக்கு பருவமழை நிறைவு – 17 மாவட்டங்களில் மழை குறைவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில் வழக்கமான அளவான 44 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்துக்கு கடந்த அக். 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்.1 முதல் டிச.31 வரை வடகிழக்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் நிறைவடைந்தது. வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 44.3 செமீ மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 44.5 செமீ (வழக்கத்தை விட 1 சதவீதம் அதிகம்) மழை கிடைத்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ஜன.1, 2 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 3, 4-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.