திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நள்ளிரவு (15ம் தேதி) 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
மேலும், பாதயாத்திரை பக்தர்கள் சாரை சாரையாக குவிந்து வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (15ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் 16ம்தேதி காணும் பொங்கல் (திருவள்ளுவர் தினம்), 17ம் தேதி உழவர் திருநாள், ஜன. 21ம் தேதி தை அமாவாசை, ஜன.26ம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்களில் அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது.