புதுடெல்லி: காரில் இளம்பெண் சடலம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பலியான விவகாரத்தில் 11 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. புத்தாண்டு தினத்தில் டெல்லியில் 20 வயது இளம்பெண் மீது மோதிய கார், அவரது உடலை சுல்தான்புரியிலிருந்து கஞ்சவாலா பகுதி வரை 12 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இந்த விபத்து தொடர்பாக காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட கார் சென்ற வழித்தடத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் மிகுந்த கவனக்குறைவாக இருந்ததாகவும், அவர்கள் யாருமே சம்மந்தப்பட்ட காரை தடுத்து நிறுத்தவில்லை என்றும் சிறப்பு கமிஷனர் ஷாலினி சிங் தலைமையிலான விசாரணை குழு ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது. அதனடிப்படையில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பணியில் அலட்சியமாக இருந்த ரோந்து போலீசார் 11 பேரை சஸ்பெண்ட் செய்து டெல்லி காவல் துறை நேற்று நடவடிக்கை எடுத்தது.