திருமலை: ஐதராபாத்தில் உணவு டெலிவரிக்கு சென்றபோது வாலிபரை வளர்ப்பு நாய் கடிக்க முயன்றதால் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஷோபனாநாகனி என்ற பெண் கடந்த 11ம் தேதி ஆன்லைன் ஆப்பில் உணவு ஆர்டர் செய்தார். டெலிவரி பாயான முகமது ரிஸ்வான்(23) என்பவர் உணவு பார்சலை தர கதவை தட்டியுள்ளார்.
அப்போது கதவு திறந்திருந்ததால் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் வெளியே வந்து முகமதுரிஸ்வானை கடித்தது. தப்பிக்க வழியின்றி 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முகமது ரிஸ்வானின் சகோதரர் காஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஷோபனாநாகனி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.