ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் மீது மோதி சேதப்படுத்துவதற்கு 2 ஸ்டீல் படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்போவதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று, தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், ‘‘மீனவர்கள் பிரச்னை நீண்ட காலமாக தொடர்கிறது. அதனால் இந்த விஷயத்தில் நீங்கள் இலங்கை கடற்படையினரை மட்டும் நம்பியிருக்காமல், நீங்களும் தமிழ்நாடு மீனவர்களை எதிர்க்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு மீனவர்களை பிடிப்பதற்கும், அவர்களின் படகுகளை இடிப்பதற்கும் 2 பெரிய ஸ்டீல் படகுகளை தருகிறேன். அந்த படகுகளின் வெள்ளோட்டத்தில் நானும் கலந்து கொள்வேன்’’ என்றார். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இக்கருத்து சர்ச்சயை ஏற்படுத்தியுடன் தமிழ்நாடு மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.