ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இபிஎஸ் அணியினர் அண்ணாமலையுடன் சந்திப்பு 

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. வேட்பாளர் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இன்று (ஜன.21) சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சந்தித்தனர். ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர்.

முன்னதாக காலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம். பாஜக போட்டியிட விரும்பினால் விட்டுத்தருவோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வருகிறார். இந்நிலையில் தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.