புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த 88 வயது முதியவருக்கு, லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவருக்கு பம்பர் பரிசு கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் தேராபாசி நகரைச் சேர்ந்தவர் மகந்த் துவாரகா தாஸ்(88). இவர் கடந்த 40 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். ஆனால் ஒரு தடவை கூட பம்பர் பரிசை வென்றதில்லை. மகரசங்கராந்தியை முன்னிட்டு ரூ.5 கோடி பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. தனது பேரனிடம் பணத்தை கொடுத்து லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார் துவாரகா தாஸ். இதன் குலுக்கல் கடந்த 16-ம் தேதி நடந்தது. இதில் துவாரகா தாஸுக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘லாட்டரி சீட்டில் ரூ.5 கோடி பம்பர் பரிசு விழுந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சுமார் 35 முதல் 40 ஆண்டு காலமாக லாட்டரி சீட்டுகள் வாங்கி வருகிறேன். இந்தப் பணத்தை எனது இரு மகன்களுக்கு வழங்குவேன்’’ என்றார்.
லாட்டரியில் விழுந்த பரிசுத் தொகை ரூ.5 கோடியில் 30 சதவீதம் வரி போக, மீதிப்பணம் மகந்த் துவாரகா தாஸுக்கு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில உதவி லாட்டரி இயக்குனர் கரம் சிங் தெரிவித்துள்ளார்.