கடலூர் வந்த மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு அறை ஒதுக்குவதில் பாரபட்சம் என புகார்

கடலூர்: பாஜக மாநில செயற்குழுக் கூட்டதிற்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அறை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முதல்வருக்கு மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் இன்று பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கடலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பழைய கட்டிடத்தில் உள்ள சிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு அவர் சென்றபோது, போதிய பராமரிப்பின்றியும், கழிப்பறைகளில் துர்நாற்றமும் வீசியுள்ளது. பின்னர் புதியக் கட்டிடத்தில் உள்ள சிறப்பு அறைக்கு சென்றபோது, அது மாநில அமைச்சர்கள் இருவர் வருவதால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை தொடர்புகொண்ட அமைச்சர் முருகன், ஒரு வாரத்திற்கு முன்னரே அறை ஒதுக்கீடு தொடர்பாக முன்பதிவு செய்துள்ளேன். இவ்வுளவு மோசமான அறையை ஒதுக்கியுள்ளீர்களே என வினவியுள்ளார். அதற்கு ஆட்சியர், அறை நன்றாகத் தானே இருக்கிறது எனவும், புதிய கட்டிட அறைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் பதிலளித்தாராம்.

இதனால் மேலும் ஆவசமடைந்த அமைச்சர் முருகன், நீங்கள் வந்து இந்த அறையில் தங்கிப்பாருங்கள் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு தனியார் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து தலைமைச் செயலரிடம் முறையிட்டுள்ளார். மேலும், முதல்வரின் உதவியாளரிடமும் முறையிட்டு விட்டு, மெயில் மூலமும் புகார் அளித்துள்ளாராம். இதையடுத்து ஆட்சியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியரை தொடர்புகொண்ட போது, அவர் பேச முன்வரவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.