அயோத்தியில் நடக்க இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அவசர கூட்டம் ரத்து

அயோத்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த, கூட்டமைப்பின் அவசர பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமரையும் இடைநீக்கம் செய்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடக்கும் தர நிர்ணயத்திற்கான போட்டி உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது மல்யுத்த வீரர்கள் வைத்துள்ள நிதி,நிர்வாக, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நடத்த விசாரணைக்குழு அமைக்கப்படும். முறையாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு பொறுப்பேற்கும் வரையில் கூட்டமைப்பின் அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் மற்றும் மன அழுத்தம் தருவதாக புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். மூன்று நாட்கள் போராட்டம் நடந்து வந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போரட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விசாரணை முடியும் வரையில் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.