நீச்சல் கற்றுக் கொடுக்கப் போய் பரிதாபமாக உயிரிழந்த தந்தை-மகன்; ஓமலூர் அருகே நடந்த சோகம்!

ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுத்தர சென்ற இடத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ராஜா, பிரியா தம்பதியினருக்கு பிரகதீஷ், பிரஷிதா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
image
இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் மகனுக்கு நீச்சல் கற்று கொடுக்க கிணற்றடிக்கு ராஜா அழைத்து சென்றுள்ளார். அப்போது ராஜா வீட்டருகே இருக்கும் கோவிந்தன் என்பவரின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்று, சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் இறங்கி மகனுக்கு நீச்சல் கற்று கொடுத்துள்ளார்.
அப்போது பிரகதீஷ் கிணற்றின் மையப்பகுதிக்குள் சென்றிருக்கிறான். மகனை காப்பாற்ற முயன்றபோது, இருவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீண்டநேர போராட்டத்தில் தந்தை ராஜாவும், மகன் பிரகதீஷும் கிணற்றில் மூழ்கினர்.
image
இதையறிந்த மனைவி பிரியாவும், மகள் பிரஷிதாவும் சத்தம்போட்டு கத்தியுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்க போராடினர். ஆனால், ஆழம் அதிகமாக இருந்ததால், கிராம மக்களால் தந்தை மகனை மீட்க முடியவில்லை.
image
இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய ராஜா மற்றும் சிறுவன் பிரகதீஷ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.