மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம்… திமுக அமைச்சர் பொன்முடி கருத்து…!!

மத்திய அரசு தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இருப்பினும் நாடு முழுவதும் மத்திய அரசால் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அரசியல் ரீதியில் எதிர்த்து வந்தது. 

இதன் காரணமாக தேசிய கல்விக் கொள்கைக்கு இணையான மாநில அளவில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் மூலம் தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் இறுதி செய்யப்பட்டது

இந்த சிறப்பு குழுவின் வரைவு அறிக்கை அடுத்த மாதம் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இந்த வரைவு அறிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை சார் நிபுணர்களின் கருத்து கேட்ட பிறகு இறுதி அறிக்கை தயாராகும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை ஏற்றுக் கொள்ளலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் மாநில கல்விக் கொள்கையை பாதிக்கப்படாமல் ஆய்வு செய்து நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் ஆளுங்கட்சியான அதிமுகவை மத்திய அரசுக்கு அடி பணிந்த முதுகெலும்பில்லாத அதிமுக அரசு என விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவுக்கு சம்பளம் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.