21 தீவுகளுக்கு நாளை பெயர்சூட்டும் விழா – பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடி நாளை சூட்டுகிறார்.

நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23, பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் டெல்லியில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு பெயர் சூட்ட இருக்கிறார்.

எதிரிகளுக்கு எதிராக பராக்கிரமத்தை வெளிப்படுத்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதினை பெற்ற 21 விருதாளர்களின் பெயர்கள் இந்த 21 தீவுகளுக்கு வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018 ஜனவரி வரை 21 பேர் பரம் வீர் சக்ரா விருதினை பெற்றுள்ளனர். 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும், ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.