கல்லூரி வளாகத்தில் தானியங்கி நாப்கின் இயந்திரம் கோரி வழக்கு… நீதிமன்றத்தின் முடிவு என்ன?

மதுரை கே.கே. நகரை சேர்ந்த பொழிலன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. கடந்த ஆண்டுகளை காட்டிலும் கூடுதல் சதவீதமாக பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

சிறிய நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை கல்லூரிகள் உள்ளன. கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் சதவீதமே அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில். கல்லூரி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், அனைத்து கல்லூரிகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும்.

மேலும் பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்” என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை, நியாயமானது. தென் மாவட்டங்கள் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என கருத்து தெரிவித்த அவர்கள், ஏன் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு என்று மனுவில் கேட்கவில்லை எனவும் கேள்வி ஏழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எல்லைக்கு உட்பட்டுள்ளதால் தென்மாவட்டங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் இந்த வழக்கில் யுஜிசி தலைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்கவும், மனுதாரர் வழக்கு குறித்து கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.