தமிழக அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்கவும் காலை உணவு திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்.15ம் தேதி அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ 33.56 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக உப்மா, கிச்சடி, பொங்கல், ரவா கேசரி அல்லது சேமியா கேசரி போன்ற பலவகையான காலை உணவுகளை உள்ளடக்கும் வகையில், காலை உணவு திட்டத்தில் தினசரி உணவுப் பட்டியல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
நாள்தோறும் ஒவ்வொரு மாணவருக்கும் காலை உணவாக 150 கிராம் முதல் 200 கிராம் வரை காய்கறிகள் மற்றும் சாம்பார் சேர்த்து சமைத்த உணவு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த திட்டத்தை தமிழகத்தில் உள்ள 433 அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4.6 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.