காந்திநகர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தனது உத்தரவின் பேரில் பல கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பசுவின் சாணத்தான வீடுகளை அணு கதிர்வீச்சால் பாதிக்காது என்பவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், பசுவின் கோமியம் தீராத நோய்களுக்கு மருந்தாகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுவில் இருந்து மதம் பிறக்கிறது என கூறியுள்ள நீதிபதி பசுவை ஒரு விலங்காக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பசுவின் ரத்தம் பூமியில் எப்பபோது படியாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்சனைகள் முடிவடையும் என்றும், பசு பாதுகாப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.