பராமரிப்பு உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பராமரிப்பு உதவித் தொகை (Maintenance Allowance) ரூ.2000/- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என 211391 நபர்கள் இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

அரசு இத்திட்டத்தின் கீழ் மேலும் பயனடைய விண்ணப்பித்து காத்திருப்போர் 24951 நபர்களுக்கும் தற்போது மாவட்ட உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பயனை முழுமையாக தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம், தேசிய அடையாள அட்டை எண், தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்விவரங்களை விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தெரிவிக்கும் பட்சத்தில் உதவித்தொகை அனைவருக்கும் விரைவில் வழங்கவும், மேலும், உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் வழங்க ஏதுவாக அமையும். எனவே, பொதுமக்கள் அரசின் இந்நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.