பிப்ரவரி 3ல் அதிரும் அதிமுக… பதிலுக்கு இறங்கி அடிக்க ரெடியான பன்னீர் டீம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. அதன்பிறகு ஏன் இவ்வளவு தாமதம்? சீக்கிரமா முடிச்சு விட்டிருங்க. அதிமுக யார் கையில் என்பதை அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற பேச்சு எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த தீர்ப்பு வருவதற்குள் நடக்கும் அரசியல் அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி பாதியில் தீர்ப்பு வரக்கூடும் என இருவிதமான தகவல்கள் உலவி வருகின்றன.

பலமான மோதல்

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டைக்குள் புகுந்து தனது செல்வாக்கை காட்ட வேண்டும் என்று
எடப்பாடி பழனிசாமி
திட்டமிட்டுள்ளார். அதாவது, தேனியில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்காக பிப்ரவரி 3ஆம் தேதியை குறித்து வைத்துள்ளனர். தேனி பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆதரவாளர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

தென்மாவட்ட செல்வாக்கு

இதை பார்த்து
ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு அப்படியே ஆட்டம் காண வேண்டும். இனியும் தம்முடன் போட்டி போடக் கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிட வேண்டும் என்று கருதுகிறதாம். தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கே செல்வாக்கு இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை உடைக்க தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறது.

தேனியில் பொதுக்கூட்டம்

இதற்கு பலம் சேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டார். இந்த சூழலில் தேனி பொதுக்கூட்டம் வேற லெவல் அடையாளத்தை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என வியூகம் வகுத்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலடிக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. எடப்பாடியின் கோட்டை என்பது கொங்கு மண்டலம்.

ஓபிஎஸ் டீம் பதிலடி

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் இந்த மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. எனவே சேலத்தில் அதே பிப்ரவரி 3ஆம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்தினால் எப்படி என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம். ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சார களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இந்த தேர்தலில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு அதிமுகவில் போட்டி அரசியலை முன்னெடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அப்படியே நடந்தாலும் அதிமுக வட்டாரத்திலேயே கடும் விமர்சனத்திற்கு ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை. எடப்பாடி தரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளருக்கான தேர்வில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதே வேலையில் தான் ஓபிஎஸ் தரப்பும் உள்ளது.

இரட்டை இலை சின்னம்

அடுத்தகட்டமாக இரட்டை இலை சின்ன விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும். அதை சமாளித்து பொது சின்னத்தில் வெற்றி பெறும் நிலை கூட வரக்கூடும். பின்னர் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என களம் சூடுபிடிக்கும். இதில் பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்தே அதிமுக தங்களுக்கே என சொந்த கொண்டாட ஆரம்பித்துவிடுவர். எனவே தேனி vs சேலம் போட்டி சற்று தள்ளி போகலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.