மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை முழு மனதுடன் வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்த அவர், இதற்காக தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அவர் பேசிய அந்த வீடியோவை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, “சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்க செய்வதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, சந்திரசூட் பேசினார். இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என ஆலோசனைகளை கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முயற்சி. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் பயனடைவர்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.