ஐஎன்எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைப்பு

மும்பை: ஐஎன்எஸ் கல்வாரி வகையை சேர்ந்த ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல் வகீர் நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் மசாகன்  கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட கல்வாரி வகையை சேர்ந்த நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலான வகீர் நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த விழாவில் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கலந்து கொண்டு ஐஎன்எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஐஎன்எஸ் வகீர் குறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில்,“ வகீர் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும். எதிரிகளுக்கு எச்சரிக்கை தரும் வகையிலும், கடல்சார் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் இருக்கும்.
நெருக்கடியான காலங்களில் உளவு, கண்காணிப்பு பணிகளில் கடற்படை ஆற்றலை வலுப்படுத்தி தகுந்த பதிலடியை எதிரிகளுக்கு வழங்குவதற்கு உதவும். இந்த நீர்மூழ்கி கப்பலில் உலகின் மிக சிறந்த சென்சார் அமைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் உள்ள சக்திவாய்ந்த டீசல் இன்ஜின்கள்  பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்யும் திறன் பெற்றவை” என்று குறிப்பிட்டனர். ‘‘வகீர் என்பது மணல் சுறா ஆகும். இது ரகசிய செயல்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றை குறிக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் வகீர் கப்பலுக்கு பொருந்தும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.