புதுடில்லி தமிழகத்தின் கடல் எல்லையைத் தாண்டியுள்ள பகுதியில், நிபந்தனைகளுடன் சுருக்கு மடி வலை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்துள்ளன. சாதாரண மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹீமா கோஹ்லி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சுருக்கு மடி வலையை, சில நிபந்தனைகளுடன் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பினரின் நலனையும் கருதி, ‘வாழ், வாழவிடு’ என்ற அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள 12 கடல் மைல், அதாவது, 22 கி.மீ., துாரத்துக்குள், இந்த வலையைப் பயன்படுத்தக் கூடாது.
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், அதாவது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே மீன்படி படகுகள் கடலுக்குள் செல்லலாம்.
காலை 8:00 மணிக்குப் பின் புறப்பட்டு, அதே நாளில் மாலை 6:00 மணிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள, பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் மட்டுமே இதில் ஈடுபடலாம். மீனவர்கள் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement