தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் அம்மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தலைமை செயலக கட்டிடத்துக்கும், சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, ரூ.650 கோடி செலவில் தெலங்கானாவின் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்திற்கு சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் பெயரை அம்மாநில அரசு சூட்டியுள்ளது. இந்த கட்டிதத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு விழா வருகிற பிப்ரவரி மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள டெல்லி, கேரளா, பஞ்சாப், உள்ளிட்ட மாநில முதல்வர்கள், மேலும், பல்வேறு முன்னாள் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த விழாவில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அழைப்பு விடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்தியில் 3ஆவது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது டிஆர்எஸ் கட்சியை, பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என பெயர் மாற்றி, தேசிய கட்சியாக அறிவித்துள்ளார். எனவே, தெலங்கானா தலைமை செயலக கட்டிட திறப்பு விழா, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.