Erode East Bypolls, Anbumani: தர்மபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சனையாக இருப்பது குடிநீர் பிரச்சனை, வேளாண் பிரச்சனை. ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட மக்களிடம் பத்து லட்சம் கையெழுத்து பெற்று அப்போதயை முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம்.
குடிநீருக்காக போராட்டம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் அரை குறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லில் வெள்ளம் காலங்களில் உபரியாக செல்லும் நீரினை தர்மபுரி மாவட்ட ஏரிகளை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த என்ன சிரமம்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கார்டியாலாஜி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை கொண்டு வரவேண்டும். குடியரசு தினத்தன்று முதலமைச்சர், கள்ள சாராயத்தை ஒழித்தற்காக காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கினார். அதே நேரம் கரூரில் மாவட்ட ஆட்சியர் அதிக அளவில் டாஸ்மாக் மது விற்பனை செய்ததற்காக சான்றிதழ் வழங்கியிருக்கிறார்.
திமுக அரசு மது ஒழிப்பில் என்ன கொள்கையில் இருக்கிறது எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டும். மதுவை தமிழ்நாடு அரசு ஒழிக்க வேண்டும் அல்லது படிப்படியாக குறைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சில மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்கு காரணம் பாமக தான். போதை பொருள் தமிழ்நாட்டில் தாராளமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இதை ஒழிக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சா வெவ்வேறு வடிவில் விற்கபடுகிறது. இந்த தலைமுறைகளை காப்பாற்றிட போதை பொருட்களை ஒழிக்க வேண்டும்.
ஆளுநர் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதற்கான சட்டத்தில் ஏன் கையெழுத்திடவில்லை. தற்கொலை செய்து கொண்ட் 12 பேரின் குடும்பத்திற்கு பொறப்பேற்பாரா அவர். எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்கான சட்ட மசோதவில் கையெழுத்திடுங்கள். சட்ட மசோதாவின் நிறைவேற்றுங்கள், ஆளுநரே. இடைத்தேர்தல் அவசியமற்றது, எங்களுக்கு இடைத்தேர்தலில் நம்பிக்கை இல்லை, நேரம் காலம். அது வீண்தான். யாருக்குமே எந்த பயனுமே இருக்கப் போவதில்லை. இந்த இடைத்தேர்தல் பொறுத்த வரைக்கும் பாமகவின் நிலைப்பாடு, தாங்களும் போட்டியிட போவதில்லை. யாருக்கும் ஆதரவும் தர போவதில்லை.
தர்மபுரியில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதை காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியினை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்து திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல இருக்கிறேன்” என்றார்.