படத்தை அறிவித்த கையோடு தனி விமானத்தில் காஷ்மீர் பறந்த ‘தளபதி 67’ படக்குழு!

நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் உறுதிசெய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தநிலையில், நேற்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி, விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் உடன் இயக்குநர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி வசனம் எழுதுவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 2-ம் தேதி படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை 8.30 மணிக்கு தனிவிமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமான டிக்கெட் புகைப்படத்தை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடந்த ‘தளபதி 67’ படப்பிடிப்புடன், சிலப் பகுதிகள் கொடைக்கானலிலும் நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு விஜய் மற்றும் மிஷ்கினின் பகுதிகள் எடுக்கப்பட்டதாகவும், காஷ்மீர் செல்வதற்கான தேதிகள் இயக்குநர் மிஷ்கினிடம் இல்லாததால், படக்குழு மிஷ்கினுடன் கொடைக்கானலில் சில பகுதிகளை படமாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது காஷ்மீர் சென்றுள்ள படக்குழு அங்கு சஞ்சய் தத் மற்றும் முக்கிய நடிகர்களுடன் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹிண்ட் கொடுத்திருப்பதால், ‘தளபதி 67’ புரோமோ டீசர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.