மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில இடைத்தேர்தல் தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்குமான இடைத்தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆனையம் வெளியிட்டது.
இந்நிலையில், லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருந்த லட்சத்தீவு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது. இந்த நிலையில், லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, முகமது ஃபைசல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு ஜனவரி 25ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்தப்பின் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்துள்ள தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளது.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள லட்சத்தீவு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முகமது ஃபைசல். இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாக முகமது ஃபைசல் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், முகமது ஃபைசல் உள்பட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 11ஆம் தேதி லட்சத்தீவில் கவரட்டியில் உள்ள அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி பதவி இழப்பார். அதனடிப்படையில், முகமது ஃபைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.