முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக வங்கக் கடலில் ரூ.81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் சார்பாக நேற்று முன்தினம் கருத்து கேட்டு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கருத்து கேட்ப கூட்டத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக் கடலில் அமைய உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கான பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரி வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 14 அரசுத்துறை சார்பாக பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக பதில் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 2 துறைகள் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்துள்ளதால், அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 30 நாட்கள் அவகாசம் அளித்து பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.