பாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: சர்வதேச நாணய நிதியம்

கராச்சி,

ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. பின்னர் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அந்நாட்டில் கோதுமை, பால் பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

எரிசக்தி துறை நெருக்கடியால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் கேட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு கடனாக நிதியுதவி வழங்க முன்வந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எப்.) கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எப்.க்கு அனுப்பியது.

ஆனால், அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்து விட்டது. இதுபற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானிய அரசை மின் கட்டண உயர்வை அமல்படுத்தும்படி ஐ.எம்.எப். வலியுறுத்தியது.

இதனால், கூடுதலான மானிய தொகையான 33,500 கோடி பாகிஸ்தான் கரன்சி மதிப்பிலான தொகையை ஈடுகட்ட முடியும். இந்த, மின் கட்டண அதிகரிப்பானது, பணபற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் மின் துறையின் இழப்பை குறைக்கும் என கூறப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானில் வருகிற அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சுட்டி காட்டி இந்த நடைமுறையை அமல்படுத்த பிரதமர் ஷெபாஸ் மறுத்து விட்டார். அது தேர்தலில் எதிர்விளைவை ஏற்படுத்தி விடும் என கூறியுள்ளார்.

எனினும், சில நாட்களாக அந்நாட்டுக்கான நெருக்கடி அதிகரித்து உள்ளது. ஏனெனில் வேறெந்த நட்பு நாடுகளும் குறைந்த அளவிலான பாதிப்புகளுடன் கூடிய உதவியை அளிக்க முன்வரவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ஐ.எம்.எப். இடையே சுமூக ஒப்பந்தம் எட்டப்படும் என கூறப்படுகிறது. இதற்காக ஐ.எம்.எப். குழு ஒன்று பாகிஸ்தானில் முகாமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.

எனினும், இந்த சி.டி.எம்.பி. திட்டத்தில் உண்மையில்லை என்றும், அதில் பல்வேறு தவறுகளுக்கான நோக்கங்கள் உள்ளன என்றும் தொழில்நுட்ப ரீதியிலான விவாதத்தின்போது, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் பெற கூடிய நிதி உதவி அனைத்தும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகளின் கைக்கே போய் சேருகிறது என ஐ.எம்.எப். குறிப்பிட்டு உள்ளது. தொடர்ந்து அதன் எதிரொலியாக அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.