2014-ல் தன் 1 மாத குழந்தையை கடத்திய பெண்ணை இப்போது பார்த்த தந்தை… ஓர் உணர்வுப் போராட்டம்

ஆவடி அருகே திருமுல்லைவாயல், எட்டியம்மன் நகரில் வசித்தவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. கடந்த 2014-ம் ஆண்டு பிறந்தவுடன் கடத்தப்பட்ட இவர்களின் பச்சிளம் குழந்தையின் இருப்பிடம், தற்போது இவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாசப்போராட்டமொன்றும் ஒளிந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழரசிக்கு அயனாவரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, அவரிடம் மருத்துவமனையில் தேவி என்ற பெண் அறிமுகமாகி பழகி உள்ளார். தமிழரசியிடம் நன்கு பேச்சுக்கொடுத்த தேவி, தனக்கு வாடகைக்கு திருமுல்லைவாயலில் வீடு வேண்டும் என்று கூறி தமிழரசியை வீட்டுக்கு வந்து சந்தித்துள்ளார். அப்போது தமிழரசியை கடைக்கு அனுப்பி தேனீர் வாங்கி வரச் சொல்லி அந்த நேரத்தில் ஒரு மாத ஆண் குழந்தையாக இருந்த தேவி – ஜான் ஜெபராஜின் மகனை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து தமிழரசி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அப்போதே புகார் செய்துள்ளார்.
image
போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தியும் குழந்தையையும், தேவியையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. இருந்த போதிலும் பெற்றவர்களால் குழந்தையை தேடுவதை நிறுத்தமுடியவில்லை. அதனால் ஜான் ஜெபராஜ் குடும்பத்தினர் அயனாவரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து குழந்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜான் ஜெபராஜ் வில்லிவாக்கம் பகுதியில் தேவியை பார்த்துள்ளார். பல வருடங்கள் கழித்து பார்த்தவுடன், அவரை பின் தொடர்ந்து பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அப்போது தேவி தப்பி சென்று விட்டார். இதையடுத்து, ஜான் ஜெபராஜ் முதல்வர் தனி பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் தேவியை தேடி வந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை புழல் மதுரா மேட்டுப்பாளையம், லிங்கம் 6ஆவது தெருவில் வசித்து வந்த தேவியை (43) அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவரை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரனை நடத்தினர் காவல்துறையினர். அப்போது, தேவி வில்லிவாக்கம் பகுதியில் வசித்த போது ஒரு குழந்தையை கொன்ற வழக்கில் 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் தேவியிடம் ஒரு குழந்தை இருந்துள்ளது. அது கடத்தப்பட்ட குழந்தை என தெரியாததால் அக்குழந்தையை போலீஸார் தி.நகரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
 image
இந்நிலையில் 2017-ல் சிறைக்கு சென்ற தேவி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போதுதான் ஜான் ஜெபராஜ் அவரை பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் தேவி பற்றி போலீஸாரிடம் தகவல் கூறியிருக்கிறார். இதனால் தேவி தற்போது போலீஸாரிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து போலீஸார் தேவியை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 8 ஆண்டுக்கு பிறகு கடத்தப்பட்ட மகன் மீண்டும் கிடைத்ததை எண்ணி தம்பதியினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், மரபணு சோதனைக்கு பிறகு நீதிமன்றம் மூலம் மகனை பெற முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆகவே தற்போது சிறுவன் அரசு காப்பகத்திலேயே இருக்கிறார். இன்னும் தாய் தந்தையை பார்க்கவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.