ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர், அமமுக, அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உட்பட நேற்று முன்தினம் (பிப்.6) வரை 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று (பிப்.7) அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தாக்கல் செய்தார். இதில், ‘இரட்டை இலை’ சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவமும் இடம்பெற்றிருந்தது. நிறைவு நாளான நேற்று மட்டும் 36 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 96 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (பிப்.8) நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.