திண்டிவனம் அருகே பரபரப்பு.! ஆட்டோவில் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற ஓட்டுநர்.!

விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி அய்யனார். இவரது மனைவி ராஷிகா(28). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ராஷிகா கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதற்காக நல்லாளம் பகுதியில் பேருந்திற்காக நின்றிருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் திண்டிவனம் செல்வதற்காக ஏறியுள்ளார்.

ஆனால் ஆட்டோ திடீரென பெருமுக்கல் மலைப்பகுதிக்கு செல்லும் குறுக்கு வழியில் சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ராஷிகா சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சத்தம் போடாதே என ராஷிக்காவை மிரட்டி அவரது வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்பொழுது ராஷிகா ஆட்டோ ஓட்டுநரின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பி பாதுகாப்பிற்காக அருகில் இருந்து வீட்டிற்கு சென்று இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனே ஆட்டோ ஓட்டுனரை பிடிக்க சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஷிகா புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராசிக்காவை பலாத்காரம் செய்ய முயன்று ஆட்டோ ஓட்டுநர் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த சுகன்ராஜ் (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுகன்ராஜை கைது செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.