ஈரோடு கிழக்கில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திராவிட சட்டமன்றத் தொகுதி முன்னேற்ற கழகத்தினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக்
கழகத்தினர் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மதிப்பதும், கடைப்பிடிப்பதும் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 10 ஆம் தேதி அன்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஈரோடு காவிரி கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு உள்ளே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து கடந்த 11ம் தேதியன்று தினந்தந்தி நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. இது முழுக்க முழுக்க Misuse of Power ஆகும். மேலும் இது தேர்தல் முறைகேடு வகையில் Corrupt Practice ஆகும். ஆனால் இது குறித்து கடந்த 11.02.2023 அன்று நான் அளித்த புகார் மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 98, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறாரோ என்று வாக்காளர்கள் சந்தேகப்படும் அளவிற்கு ஆளும் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
அமைச்சர்களின் அத்து மீறல்கள் ஆளுங்கட்சி கூட்டணியினரின் அதிகார துஷ்பிரயோகங்களை பற்றி பலமுறை புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. குறிப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ளடங்கியுள்ள சுமார் 110-க்கும் மேற்பட்ட இடங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் காலியிடங்களை வாடகைக்கு எடுத்து அதில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து அங்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை காலை முதல் இரவு வரை அங்கேயே சட்ட விரோதமாக அடைத்து வைத்து ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் மற்றும் 3 வேளை உணவும் (காலை டிபன், மதியம் அசைவ பிரியாணி, இரவு உணவு) வழங்கியும் வருகின்றனர்.
இந்த வகையில் மட்டும் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை பலகோடி ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளார். 110 இடங்களில் தற்காலிக தகர மேற்கூரையுடன் கூடிய செட் அமைத்துள்ளனர். சில இடங்களில் இந்த கூடாரங்கள் அரசுக்கு சொந்தமான சாலை மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூடாரங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 400 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த செட்களை அமைப்பதற்கு தேர்தல் அலுவலரிடமும், காவல்துறையிடமும் முறையான அனுமதி எதையும் இதுவரை அவர்கள் பெறவில்லை. இதற்க்கு ஆதாரமாக சில புகைப்படங்களை இணைத்துள்ளோம் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.