பாஜக செய்தித் தொடர்பாளர் முன்ஜாமீன் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேச பாஜக செய்தி தொடர்பாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்க செய்ய காவல் துறைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தூத்துக்குடியில் பதிவான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்ற உம்ராவ், திருப்பூரில் பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “எனது ட்விட்டர் கணக்கை முடக்கி, இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள தகவலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், “மனுதாரர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, வட மாநில தொழிலாளர்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வழக்கில் பாஜக செய்தி தொடர்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. | வாசிக்க > பாஜக செய்தி தொடர்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.