பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரு ஆட்டங்கள்..!

மும்பை,.

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அலிசா ஹீலே தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணி மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.