‘சந்திரமுகி’ வடிவேலு வீடியோவை பகிர்ந்து ‘லியோ’ படக்குழு ட்வீட் – பின்னணி காரணம் இதுதான்!

காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ‘லியோ’ படக்குழுவினர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சய் தத்தின் சில காட்சிகள் மட்டும் சென்னையில் விரைவில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘லியோ’ படக்குழுவினர், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர். ஏனெனில் நேற்றிரவு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. இதனால் பல கட்டடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் சாலைகளில் குவிந்தனர்.

இந்நிலையில் தான், ‘லியோ’ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவின் ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று கேப்ஷனுடன், ‘சந்திரமுகி’ படத்தில் அரண்மனையை ரஜினியுடன் பார்க்கச்சென்று, தனியாக மாட்டிக்கொண்டு, அங்கே இடிந்து விழும் மரக்கட்டைகளால் வடிவேலு பயத்துடன் இருக்கும் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதற்கிடையில், காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நேற்றே விஜய் திரும்பிவிட்டதாகவும், சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது எடுத்த வீடியோ என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘லியோ’ படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.