ராகுல் காந்தியின் பதவி பறிப்பு- சட்டப்படி சந்திப்போம்… காங். மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி

புதுடெல்லி,

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

பொருளாதாரம், சமூகம், அரசியல், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் ராகுல் காந்தி உண்மையை பேசினார். இதனால், மத்திய அரசு அச்சமடைந்துள்ளது.

ராகுல்காந்தியில் குரலை நெறிக்க மத்திய பாஜக அரசு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துவருகிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கருத்துக்களை தைரியமாக பேசியதற்கான விலையை ராகுல் காந்தி கொடுத்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி ஆஜரானார்.

அரசியலமைப்பு சட்டம்103-ன் படி ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி தான் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்யமுடியும். இந்த விவகாரத்தில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்கின்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை கூட கேட்கவில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.