திருப்பூர்: மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்த விவகாரம் – ஆசிரியை இருவர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இளமதி ஈஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்தார்.

மாணவிகள்

இந்நிலையில், இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் தலித் மாணவிகள் இருவரை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய நிர்பந்திப்பதாகவும், இதற்கு அறிவியல் ஆசிரியை சித்ராவும் உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, தாராபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, அறிவியல் ஆசிரியை சித்ரா மற்றும் பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்லவில்லை. தண்ணீர் அதிகம் பயன்படுத்துமாறுதான் அறிவுறுத்தினோம் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பள்ளித் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, அறிவியல் ஆசிரியை சித்ரா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.