உக்ரைன் போர்: பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷியா – ஐரோப்பிய நாடுகள் கலக்கம்…!

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 396-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அண்டை மற்றும் ஐரோப்பிய நட்பு நாடான பெலாரசில் ரஷியா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது. ரஷியா, உக்ரைன், போலாந்து, லிதுவேனியா, லடிவா ஆகிய நாடுகளை பெலாரஸ் எல்லையாக கொண்டுள்ளது.

பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவியபோதும் அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷியாவிடமே இருக்கும் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அதேவேளை, 1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷியா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனிநாடுகளானதால் அங்கிருந்து 1996ம் ஆண்டுக்குள் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷியா திரும்பப்பெற்றுக்கொண்டது.

தற்போது பல ஆண்டுகள் கழித்து வெறொரு நாட்டில் ரஷியா அணு ஆயுதத்தை நிறுவும் நிகழ்வு உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரசில் ரஷியா அணு ஆயுதத்தை நிறுவதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.